நாட்டுக்கு உழைப்போம்…

               ‘தம்பி நீ காலை எத்தனை மணிக்கு எழப்போகிறாய்?’ அவனுடைய சகோதரி ஒருநாள் இரவு கேட்டாள்.

               ‘எப்போதும்போல ஆறு மணிக்கு…. ஏன்?’ என்றான் தம்பி.

               ‘எழுந்து?’

               ‘இதென்ன கேள்வி நிலக்கடலை விவசாயம் இருக்கிறது…. வியாபாரம் இருக்கிறது இரண்டையும் கவனிப்பேன்’.

               ‘சரி, நீ  தினமும் காலையில் ஆறுமணிக்கு எழுந்தால் கடலை வியாபாரி. 4மணிக்கு அதாவது இரண்டு மணிநேரம் முன்னதாக எழுந்தால் ஜனாதிபதியாகக்கூட ஆகலாம். முயற்சி செய்’ என்றாள் சகோதரி.

               தன் மனதில், எப்போதும் இருக்கும் ஜனாதிபதி எண்ணத்திற்கு வண்ணம் பூசியது அந்த வார்த்தைகளே! பிறகு அந்தச் சிறுவன் ஒருபோதும் ஆறுமணிவரை தூங்கியது இல்லை. ஆம்! அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற பிறகுகூட, வெள்ளை மாளிகையிலிருந்து ஓய்வு பெறும்வரை ஒருநாள் கூட அப்படித் தூங்கவில்லை. இதுதான் கடலை விவசாயியாக, வியாபாரியாக இருந்த ஜிம்மிகார்டர் அமெரிக்க ஜனாதிபதியாக மாறியதற்கான மந்திரக் காரணம்.

               காதற்ற ஊசிதான்” ஞானம் தரும் என்பதில்லை. காதில் கேட்கும் வார்த்தைகளும் மனதுக்குள் மின்சாரம் பாய்ச்சும் வல்லமை உள்ளவைதான்.

               ‘எல்லாத் திறமைகளும் எனக்கு உண்டு, ஆனால் இந்தக் கேடுகெட்ட உலகம் என்னைப் புரிந்து கொள்வதில்லை. வாய்ப்புத் தருவதில்லை’ இப்படிச் சிலபேர், இல்லை பலபேர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

               எல்லாத் திறமைகளும் உண்டு. உண்மைதான் எந்தத் திறமையாவது சிறப்பாக உண்டா?

               ஒருமுறை ஒரு நண்பர் என்னிடத்தில் சொன்னார், ‘இந்த நாடு ஒரு அருமையான கிரிக்கெட் வீரரை இழந்திருச்சுங்க’.

               ‘அப்படியா? யாரது?’ என்று நான் கேட்டேன்.

               ‘நான்தான்… நான் மட்டும் கிரிக்கெட் ஆடியிருந்தா அப்படி வந்திருப்பேன்’ இப்படிச் சிலபேர்.

               இன்னொருவர் சொன்னார். ‘எனக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கும் என்ன வித்தியாசம்னு நினைக்கிறீங்க, நானும் ஐந்தரை அடி, அவரும் அதுதான். மாநிறம், சுருட்டை முடி…. என்னா… அவருக்குக் கொஞ்சம் நடிக்கத் தெரியும்…. நமக்குச் சுட்டுப்போட்டாலும் நடிப்பு வராது’.

               எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு மெதுவாகச் சொல்கிறார் பாருங்கள்.

               சில நேரங்களில் கேள்வி கேட்பவர் முட்டாளா? பதில் சொல்பவர் மடையனா? என்று குழப்பம் ஏற்படும்.

               கிராமத்து வீதியில் ஒருவன் போய்க்கொண்டிருந்தான். எதிரில் வந்த ஒருவன், இவனைப் பார்த்து ‘போன வாரம் செத்துப்போனது நீயா? உங்க அண்ணனா?” என்று சந்தேகத்தோடு கேட்டான்.

               அதற்கு இவன், ‘எங்க வீட்ல போய்க் கேட்டுட்டு வர்றேன் இரு’ என்றான்.

            இன்றைய காலத்தில் எல்லாமே அவசரமாகத்தான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. 30நாட்களுள் மொழி கற்கலாம். 3 மணி நேரத்தில் கார் ஓட்டலாம். 3 நிமிடத்தில் சாப்பாடு தயார். ஆற அமர யோசிக்க ரசிக்க நேரமில்லை.

               திரைப்படங்களில் ஒரே பாட்டில் பணக்காரனாக மாறும் கதாநாயகனைப்போல வரவேண்டும் என்று பலர் துடிக்கிறார்கள். இப்போது லட்சாதிபதிகள் ஆவது இலட்சியம் இல்லை. கோடீஸ்வரன், குரோர்பதி இந்தக் கனவுகள்தான் அதிகம்.

             தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றி அறிந்திருப்பீர்கள். மின்சார பல்பினை உருவாக்கி இருண்டு கிடந்த உலகத்தை ஒளிமயமாக்கிய மேதை.

               மின்சார பல்பில் ஒளிவிடும் அந்தச் சிறு டங்ஸ்டன்’ இழையை இணைக்க அவர் 1300முறை முயன்றார்.

               முதலில் மூங்கில் இழை, நரம்பு இப்படி ஒவ்வொன்றாகப் பயன்படுத்தி முடிவில் 1300ஆவது பொருளாக ‘டங்ஸ்டன்’ இழையை இணைத்தார். பல்பு ஒளி வீசியது.

               அவருடைய நண்பர் கேட்டார், ‘இத்தனைமுறை நீங்கள் முயன்றது வீண் முயற்சிதானே?’

               ‘இல்லை…. இல்லை 1299 பொருட்கள் மின்சாரத்தின் வேகத்தைத் தாங்கும் சக்தியற்ற பொருட்கள் எனக் கண்டுபிடித்தேன்’ என்றார் எடிசன். தோல்வியும் வெற்றியை அடையும் வழிதான்.

              கார்கில் யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம். பாகிஸ்தான், யுத்த தளவாடங்களான பீரங்கி, துப்பாக்கி, போர்விமானங்கள் ஆகியவற்றை அவசர அவசரமாக அமெரிக்காவிடம் வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தது.

               அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய விமானத்தை ஓட்டுவதற்கான பயிற்சியை அமெரிக்க விமானிகள் பாகிஸ்தான் விமானிகளுக்கு வேகமாகச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

               ‘இதுதான் விமானத்தை மேலே ஏற்றும் கருவி’.

               ‘சரி’

               ‘இதுதான் இடதுபக்கம் திருப்பும் கருவி, இது வலதுபக்கம் திருப்பும் கருவி’.

               ‘சரி, சரி’.

               ‘இது நிலையாகப் பறப்பதற்கு’

             ‘எல்லாம் சரி விமானத்தை எப்படி கீழே இறக்க வேண்டும்?’ என்றார்;;;;; பாகிஸ்தான் விமானி.

             ‘அதை இந்திய வீரர்கள் பார்த்துக் கொள்வார்கள்…. நீங்கள் கவலைப்பட வேண்டாம்’ என்றார் அமெரிக்க விமானி.

               நமக்கு வீட்டுப்பற்று, குடும்பப்பற்று எல்லாம் உண்டு. அதே அளவு நாட்டுப்பற்று உண்டா? சந்தேகம்தான். மேல்நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இணையாகச் சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

               நாட்டுக்கொடி, தேசியச்சின்னம், தேசியகீதம் இவற்றிற்கான மதிப்பை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

               ஒரு நிகழ்ச்சியைச் சொல்லலாம். ஜப்பான் நாட்டில் பல மாடிகளைக் கொண்ட பல்பொருள் அங்காடிக்கூட்டம். திருவிழாவைக் கொண்டாடும் மக்கள் கூட்டம்.

               திடீரென்று ஒரே பரபரப்பு. ஒரு திருடன் அந்தப் பல்பொருள் அங்காடியில் மிக உயர்ந்த பொருள் ஒன்றை எடுத்துக்கொண்டு கூட்டத்திற்குள் ஓடத்தொடங்கினான்.

               எப்படிப் பிடிப்பது? என எல்லோரும் தயங்கியபோது கடையில் வேலைபார்த்த ஒரு பையன் சாதுர்யமாக ஒரு வேலை செய்தான். சட்டென்று ஓடிப்போய் ஜப்பான் நாட்டு தேசியகீதத்தை மைக்கில் ஒலிபரப்பினான். நகர்ந்து கொண்டும், நடந்து கொண்டுமிருந்த ஜப்பானிய மக்கள் சட்டென்று அப்படியே நின்றார்கள்.

               பொருளைத் திருடியவன், இதை எதிர்பாராததால் ஓடவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் தடுமாறவே கடைக்காவலர்களிடம் மாட்டிக்கொண்டான்.

               நமது திரையரங்குகளில் முன்பெல்லாம் தேசியகீதம் போட்டுப் பார்த்தார்கள். பிறகு மரியாதை கருதி அவர்களே நிறுத்திக் கொண்டார்கள்.

               இந்தியா என் தாய்நாடு என்று உறுதிமொழி பள்ளியில் சொல்வதற்காக மட்டுமில்லை, வாழ்க்கை நெறியாகக் கொள்வதற்கும்தான்.

               ஒருவர் என்னிடம் கேட்டார். ‘நகைச்சுவை எல்லா நேரங்களிலும் ஏற்படுமா?’

               நல்ல கேள்விதான். எந்தச் சூழலும் நகைச்சுவைக்குரிய சூழல்தான். நாம் அதற்கேற்ற உணர்வுகளோடு பார்த்தால் அந்தச் சுவையை அறியலாம்.

         ‘அறியாமை’ இதன் அடிப்படையில்தான் எத்தனை நகைச்சுவைகள் தோன்றுகின்றன.

               இரண்டுபேர் விரைவாகச் செல்லும் இரயில் வண்டியில் போய்க் கொண்டிருந்தார்கள். வண்டி நிற்காமல் சென்று கொண்டிருந்ததால் எந்த ஊரைக்கடந்து வண்டி செல்கிறது என்று கூடத் தெரியவில்லை.

               இருவரும் மாறிமாறி சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டே வந்தார்கள்.

               ஓர் ஊரை வண்டி வேகமாகத் தாண்டியதும் ஒருவன் மற்றவனிடம் கேட்டான் ‘போன ஊர் எந்த ஊர்? ஊர்ப்பெயர் என்ன?’

               மற்றவன் சொன்னான் ‘ஹிக்கிம்பாதம்ஸ்’ என்று. கேட்டவன் கோபத்தோடு சொன்னான் ‘போடா அது அதுக்கு முந்தின ஊர் என்று?’ ஹிக்கிம்பாதம்ஸ் என்பது புத்தகக்கடையின் பெயர், அது ஒவ்வொரு ஊர் ரயில் நிலையத்திலும் இருக்கும் என்பதை அறியாத பேர்வழிகளாகச் சிலர் உள்ளனர்.

               தொடர்ந்து ஆங்கிலப்படம் பார்க்கும் என் நண்பர் ஒருநாள் என்னிடம் கேட்டார் ‘சார் இந்த ஸ்டாரிங்னு ஒரு நடிகர் எல்லாப் படத்திலேயும் வர்றார் சார் நீங்க கவனிச்சீங்களா?’

               எனக்கு முதலில் புரியவில்லை. சற்றுநேரம் கழித்துப் புர்pந்தது. மற்றும் பலர் நடித்த, என்று ஆங்கிலத்தில் போடுவதை ஒரு நடிகரின் பெயராக நினைத்த நண்பரின் ஆங்கில அறிவு என்னை வியக்க வைத்தது.

               சென்னை பல்கலைக்கழகத்தில் பல்லாண்டுகளாகத் துணைவேந்தர் பதவி வகித்த அறிஞர் டாக்டர் ஏ.எல். முதலியார் அவர்கள் பல்துறை வித்தகர்.

               ஒருமுறை இரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். ஒரு ஊரில் வண்டி நின்றது. ஏதாவது உணவு வாங்கிச் சாப்பிட நினைத்த முதலியார் அவர்கள், இரயில்வே சிற்றுண்டிச் சாலையை நோக்கிப் போனார்.

               வாசலில் ‘இன்றைய ஸ்பெஷல்’ என போர்டு வைத்திருந்தார்கள். முதலியார் கண்ணாடியை எடுக்காமல் வந்துவிட்டதால் அருகிலிருந்த சுமைதூக்கும் ஊழியரிடம் ‘அப்பா இதோ இந்த போர்டில் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படித்துச் சொல்வாயா?’ எனக் கேட்டார்.

               அதற்கு அந்தத் தொழிலாளி ‘ஐயா நானும் உங்களை மாதிரிப் படிக்காத தற்குறிதான்’ என அடக்கமாகச் சொன்னார். முதலியார் அவர்களுக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்ததாம். இந்த இடத்தில் மற்றவர்களாக இருந்தால் கோபம்தான் வந்திருக்கும். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டால் எங்கும் இனிமைதான்.

               சிலர் ‘கவலை இல்லாமல் இருக்க வழி என்ன?’ என்று கேட்கிறார்கள்.

               முதலில் கவலை இல்லையே என்ற கவலையை விடவேண்டும். பிறகு, கவலை எல்லோருக்கும் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு ஆறுதல் அடையவேண்டும்.

               யானை மிதித்துவிடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் எறும்பு போன்ற உயிர்கள் நடமாடவே முடியாது.

               உலகில் மிகப்பெரிய பணக்காரரான ராக்பெல்லரின் மகன் அவரிடத்தில் தனக்கு ஏதாவது அறிவுரை சொல்லுமாறு கேட்பார்.

               ராக்பெல்லர் சொன்னார், ‘கவலையை விடு… இரண்டு கொள்கைகளை உன் வாழ்க்கையில் எப்போதும் கடைப்பிடி வெற்றி பெறுவாய்’ என்று.

               ‘ஒன்று, கொடுத்த வாக்குறுதியை உன் உயிரே போனாலும் நிறைவேற்றத் தயங்காதே’.

               ‘இரண்டு அப்படிப்பட்ட வாக்குறுதியை ஒருபோதும் யாருக்கும் கொடுக்காதே’.

               தேசத்தை நேசிப்போம், நாட்டுப்பற்றை வளர்ப்போம்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.